பொதுவாக அனைவரும் எதையாவது எழுதத் தொடங்கும் முன் பிள்ளையார் சுழி இடுவார்கள். ஆனால் நான் பேசப் போவது காதலைப் பற்றி என்பதால், மன்மதன் சுழி இட்டிருக்கிறேன். பொதுவாக நம்மில் பலருக்கு அடுத்தவர் கடிதத்தைப் படிப்பதில் ஓர் தனி ஆர்வம் இருக்கும். இங்கே "நம்மில் பலருக்கு என்ற பிரயோகம் நாகரிகம் கருதி தானாகவே வந்துவிட்டது என்றே நினைக்கிறேன். பாதி சிங்கம் பாதி மனிதனாக அவதரித்த நரசிம்ம பகவானைத் தவிர, முழு மனிதனாகவே பிறந்த நம் அனைவருக்குமே இந்த திருட்டு மாங்காயை ருசிக்கும் புத்தி சிறிதளவேனும் இருக்கும். அடுத்தவர் கடிதத்தைப் படிக்கும் அளவுக்கு அனைவரும் செல்வதில்லை என்றாலும், அடுத்தவர் கைப்பேசியில் உரையாடல் குறுஞ்செய்திகளைப் படிப்பது, புத்தகத்தில் அடித்து விடப் பட்ட பெயரைப் படிக்க முயல்வது, குறுக்கு உரையாடல்களை (கிராஸ் டாக்?!) உற்றுக் கேட்பது போன்றவை எல்லாம் நாம் அனைவரும் செய்வது தானே? எதற்கிந்தப் பீடிகை? சொல்கிறேன்.
இப்படி அங்குமிங்குமாய் கிடைக்கும் ரகசியங்களை அறிவதிலேயே இவ்வளவு சுவாரஷ்யம் இருக்கும் போது, ஒரு காதல் கடிதத் தொகுப்பே படிக்கக் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படி இரு காதலர்களின் காதல் கடிதத் தொகுப்பு தான் இந்தப் படைப்பு. இந்த முன்னுரைக்கு நீங்கள் தரும் பதிலைப் பொறுத்தே இதைத் தொடரலாமா, வேண்டாமா என்பதை நான் முடிவு செய்ய வேண்டும்.
தோழமையுடன்,
நிலவின்காதலன்,
வெ.திருஞான சம்பந்தம்